CHENNAI RAIN: வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்றும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று (அக்.15) தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கேரளா பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் வானிலை மையம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும்.

அதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம். சென்னையில் ஒரு சில பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது.

அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்” என்று அவர் தெரிவித்திருந்தார். அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.