தமிழ்நாட்டில் நாளை (15.10.2024) முதல் வருகிற அக்.17ஆம் தேதி வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 13.10.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று தெரியவருகிறது. இந்த கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுகள் நடைபெற்றன.

அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கக்கூடிய மழைநீரை வெளியேற்ற 990 பம்புகள் மற்றும் 57 பம்ப்செட் பொருத்தப்பட்ட டிராக்டர் ஆகியவை தயார் நிலையில் இருக்கின்றன எனவும் மோட்டார் பொருத்தப்பட்ட 36 படகுகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 46 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர், 25 மெட்ரிக் டன் சுண்ணாம்பு தூள், பினாயில் ஆகியவை தேவையான அளவு, இருப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, 169 நிவாரண மையங்கள், போதுமான சமையல் கூடங்கள், மீட்புப் பணிகளுக்காக 59 ஜேசிபி-க்கள், 272 மர அறுப்பான்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

176 நீர் இறைப்பான்கள், 130 ஜெனரேட்டர்கள், 115 லாரிகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பேசும்போது, “செங்கல்பட்டு மாவட்டத்தில், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 33 பல்துறை மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 102 ஜேசிபி-க்கள், 116 படகுகள், 83 ஜெனரேட்டர்கள், 116 நீர் இறைப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களும், 290 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன” என தெரிவித்தார்.

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்கள் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என அரசு தர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.