Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நேற்று (30.09.2024) இரவு 10 மணி அளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய அவருக்கு, உடல் சோர்வு மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே திட்டமிட்டு மருத்துவரின் ஆலோசனைபடிதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், திடீரென அனுமதிக்கப்படவில்லை என்றும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பயப்படும்படியாக எதுவும் இல்லை என்றும் குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வேட்டையன், கூலி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால், சில தினங்களாகவே அவருக்கு உடல் சோர்வு மற்றும் லேசான நெஞ்சுவலி போன்ற உணர்வு ஏற்பட்டிருந்ததாகவும், அதற்காக அவர் மருத்துவரிடம் கலந்தாலோசித்துள்ளார் என்றும் தெரிகிறது.

அப்போது மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இன்று ரஜினிகாந்திற்கு இதய சிகிச்சைப்பிரிவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 நாட்களில் ரஜினி வீடு திரும்புவார் என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அதே சமயம், இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக STENT வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய், ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுவதாக தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.