MS BHASKAR: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுமக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவிக்கு கடந்த திங்களன்று பாலியல் வன்கொடுமை… பாதுகாப்பு வேண்டி மாணவர்கள் போராட்டம்… உடனே பொதுவாக சொல்லப்படும் கருத்து “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது.”
சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும். இது யார் குற்றம்? கல்வி கற்க செல்லும் இடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா? காதலனோடு மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிற்றா?.
வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன், நெட்டில் விடுவேன் என்று அந்த காமுகன் மிரட்டினால் விட்டால் விடடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும். அவனை மட்டுமல்ல… தப்பி ஓடிய அந்த காதலனையும்தான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கான்ஸ்டபிளை போட்டா பாதுகாப்பு தர முடியும்! பெண்ணைப்பெற்ற தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன், மொத்தத்தில் அனைவரும் முக்கியமாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்க வேண்டியது அவசியம்.
தும்பை விட்டு வாலை பிடிப்பதால் பயனில்லை. சட்டம் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப் போவதில்லை. இதில் ஒருவேளை அரசை குறை கூறினால் அது நியாயமே இல்லை” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.