“கடவுளே அஜித்தே” – ‘இனி இப்படி சொல்லாதீங்க’.. ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்

0
46

AK: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ‘விடாமுயற்சி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் அன்று வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. டீசரில், ‘எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு’ என்ற வாசகம் இடம்பெற்றது.

இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. டீசர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி ஹிட்டடித்தது.

அதே போல் பர்ஸ்ட் சிங்கிளும், புரோமோ வீடியோவும் ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பர்ஸ்ட் சிங்கிளை எதிர்பார்த்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு நேரடியாக கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “சமீப காலமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷம் என்னை கவலையடைய செய்திருக்கிறது.

எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.

என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here